Tuesday, January 15, 2008

விடுதலை வீரன் வீர வாஞ்சிநாதன்

விடுதலை வீரன் வீர வாஞ்சிநாதன் நன்றி திரு http://www.ennar.blogspot.com/

""இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள்'' என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் ஒருவராகத் தான் வாஞ்சிநாதன் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்.

உண்மையில் இவர் இதற்கும் மிக மேலே. இவர் வரலாற்று நாயகன். ஆனால், அவரது தீரச் செயலின் கன பரிமாணம் தனித்தன்மை வரலாற்று முக்கியத்துவம் சரியாக உணரப்படவில்லை.

ஆங்கிலேயர்கள் நாடு விட்டு நாடு வந்து இந்த மண்ணை ஆக்கிரமித்து இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களையே அடிமைப் படுத்திக் கொண்டவர்கள். தமிழகத்தில் தங்களை எதிர்த்துப் போராடிய புலித்தேவன், சின்னமலை, கட்டபொம்மன், ஊமைத்துரை, அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள் ஆகியோரை இந்த மண்ணிலேயே தூக்கிலிட்டுக் கொன்றவர்கள்.
கட்டபொம்மன் வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்த்து தரைமட்டம் ஆக்கியதுடன் அந்த மண்ணில் தங்களுக்கு எதிராக மீண்டும் ஒரு போராட்டம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக அந்த ஊரையே ஏர் கொண்டு உழுது விட்டார்கள்.

வேலூர்ப் புரட்சியின் முடிவில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட பின் அவர்களது வாரிசுகள் மீண்டும் தங்களுக்கு எதிராகத் தலை எடுத்து விடக் கூடாது என்பதற்காக இளம் சிறார்களாயிருந்த அவர்களது மகன்களையும் மருதுபாண்டி யருக்குத் துணை நின்ற புரட்சிக் காரர்களையும் மலேயாவுக்கு நாடு கடத்தி அங்குள்ள சிறையில் அடைத்தவர்கள்.

சிறையில் அடைக்கப்பட்ட தமிழர்களின் உடல்களைச் சுற்றி இரும்பு விலங்குகள் பூட்டப்பட்டு அவர்கள் நடக்கும் பொழுது "கிளிங்' "கிளிங்' என்று ஓசை எழுப்பியதால், தமிழர்களுக்கு ""கிளிங்கர்கள்'' என்ற பட்டப் பெயர் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது.

பிற்காலத்தில் ஆஷ்துரை கூடத் தன் பங்கிற்குத் தூத்துக்குடியில் ஊர்வலமாக வந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் சிலரைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறார். இத்தகைய கொடுமைக்கார ஆங்கிலேயரை எதிர்த்துப் பிற்காலத்தில் தமிழகத்தில் தமிழர்கள் கொடிபிடித்திருக் கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்களே தவிர, யாரும் ஆயுதம் ஏந்தவில்லை 1806 இல் குறுநில மன்னர்களும் பாளையக்காரர்களும் நடத்திய வேலூர்ப் புரட்சிக்குப் பின் 105 ஆண்டுகள் கழித்து அந்தக் குறையைப் போக்கி அவர்களிடம் கணக்குத் தீர்த்தவர் வாஞ்சிநாதன் தான்.

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேய அரசை எதிர்த்து தமிழகத்தில் நடந்த போராட்டங்களின் பாதிப்புகள் எல்லாம் தமிழக எல்லையைத் தாண்டவில்லை. ஆனால், வாஞ்சிநாதன் நிகழ்த்திய தீரச் செயல்தான் இந்திய எல்லையையும் தாண்டி நம்மைப் பாதித்துக் கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டையே உலுக்கியது. ஆங்கிலேயரிடம் பாதிப்பை ஏற்படுத்தியது. தகவல் தொடர்பு, போக்குவரத்து ஆகிய துறைகளில் மிகவும் பின் தங்கியிருந்த அக்காலத்திலேயே வாஞ்சிநாதன் 1911, ஜுன் 17 இல் ஆங்கிலேயப் பேரரசின் பிரதிநிதியான கலெக்டர் ஆஷ்துரையைச் சுட்டது பற்றி 1911 ஜுன் 19 ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இவர் தான் வெளிநாட்டுப் பத்திரிக்கையின் தலையங்கத்தில் புகழப் பட்டவர். இந்திய விடுதலையில் மிகவும் அக்கறை கொண்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் பக்கபலமாகத் திகழ்ந்த மேடம் காமா அவர்கள் அப்போது பாரீஸ் நகரிலிருந்து வெளியான தனது ""வந்தே மாதரம்'' பத்திரிக்கையின் தலையங்கத்தில் வாஞ்சிநாதன் தீரச் செயலைப் புகழ்ந்து இவ்வாறு எழுதினார்.

""திருநெல்வேலி கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் என்ற இளைஞர் பட்டப் பகலில் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி இந்திய மக்கள் உறங்கவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வடக்கோ, தெற்கோ, கிழக்கோ இந்தியாவின் எந்தப் பகுதியுமே இனிமேல் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பான பகுதிகள் இல்லை என்பதை எச்சரிக்கும் அபாயச் சங்கு ஊதப்பட்டு விட்டது.

இதுவரை மிதவாத அரசியலின் தொட்டிலாக விளங்கி வந்த தென்னாட்டிலும் புரட்சிக் கனல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி விட்டது. இனிமேல் இந்தியாவில் பணியாற்ற வரும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போதே தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் வர வேண்டியிருக்கும்.''

வாஞ்சிநாதனும் வ.உ.சியும்
வ.உ.சி. மென்மையான மேன்மையான பண்புக்குச் சொந்தக்காரர். ஈ, எறும்புக்குக் கூடத் துன்பம் விளைவிக்காதவர். இத்தகைய வ.உ.சியே கூட, சிறையிலிருந்த தன்னிடம் சிறைக்காவலன் கலெக்டர் ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற செய்தியைக் கூறியதும், ஆஷ்துரை கொல்லப் பட்டதற்காகக் கொஞ்சமும் இரக்கப்பட வில்லை.

மாறாக, ""நல்ல செய்தியைச் சொன்னாய் நீ நலம் பெறுவாய்'' என்று அவனை வாழ்த்தினார். அத்துடன் அவனிடம் தான் சிறைவாசம் அனுபவிப்பதற்கும், தனது கப்பல் கம்பெனி நசிந்து போனதற்கும் இந்த ஆஷ்துரைதான் காரணம் என்றும் விளக்கினார்.

ஆங்கிலேயர் காலத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் சிறைவாசம் என்பது கடுமையானது & கொடுமையானது. இந்தச் சூழ்நிலையில், ""இங்கிலாந்து சக்கர வர்த்தியின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தண்டனைக் குறைப்பு இந்த ஆண்டு வ.உ.சிக்கு கிடையாது'' என்று அந்த சிறைக் காவலன் கூறிய போது ""இப்பொழுது மட்டுமல்ல, இனி எப் பொழுதுமே எனக்கு விடுதலை இல்லா விட்டாலும் கூடப் பரவாயில்லை'' என்று அலட்சியமாக அவர் பதில் கூறினார் என்றால் ஆஷ்துரை கொல்லப்பட்டது அவருக்கு எத்தகைய மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

முத்துராமலிங்கத் தேவர் வாஞ்சிநாதனிடம் கொண்டிருந்த மரியாதை. ""சூரரைப் போற்று'' என்பார் பாரதி. யாருக்கும் தலைவணங்காத தன்மானச் சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குச் சில நாட்களுக்கு முன் அப்போது சென்னையில் வசித்து வந்த வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் அம்மையாரைச் சந்தித்து அவருடைய காலில் விழுந்து வணங்கி அவருக்கு ஒரு புடவை வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இது அவர் வாஞ்சிநாதனிடம் கொண்டிருந்த மரியா தைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

(திரு.பி. ராமநாதன் வருடந்தோறும் ஜுன் 17 ஆம் தேதி வாஞ்சி இயக்கம் சார்பில் வாஞ்சி பிறந்த புனித மண்ணான செங்கோட்டையில் மாவீரன் வாஞ்சிநாதன் நடு கல்லுக்கு வீர வணக்கம் செலுத்தும் விழாவை வருடந்தோறும் நடத்தி வருகிறார்).

அங்கிள் உங்க அனுமதி இல்லாம காப்பி பண்ணிட்டோம் மன்னிச்சிக்கோங்க.

4 comments:

said...

ஒரு வேண்டுகோள். இது போன்ற பதிவுகளை போடு முன் வரலாற்றை சரியாக படிக்கவும்.

வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டது இந்திய விடுதலை போராட்டத்திற்காக இல்லை. சனாதன தர்மத்தை நிலை நாட்டவே அவர் துப்பாக்கி ஏந்தினார்.

said...

உங்க கருத்துக்கு நன்றி தவறு இருந்தால் மன்னிச்சிக்கோங்க...

said...

டைம் டேபிள் படி செவ்வாய் வரலாறு. கரெக்டா ஃபாலோ பண்ற மாதிரி தெரியுது - வாழ்க

said...

டைம் டேபிள் படி சரியா தான் செய்யரோம் ஆனா அப்ப அப்ப உணர்ச்சி வசப்பட்டு கொஞ்சம் மொக்கை கும்மி ஜாஸ்தி ஆயிடுது...