Tuesday, November 27, 2007

பாப்பா பாட்டு - மகாகவி பாரதியார்


ஓடி விளையாடு பாப்பா -நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா -ஒரு
குழந்தையை வையாதே பாப்பா

சின்னஞ் சிறுகுருவி போலே -நீ
திரிந்து பறந்துவா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு -நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

கொத்தித் திரியுமந்தக் கோழி -அதைக்
கூட்டி விளையாடு பாப்பா
எத்தித் திருடுமந்தக் காக்காய் -அதற்க்
கிரக்க படவேணும் பாப்பா

பாலைப் பொழிந்துதரும், பாப்பா -அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்துவரும் நாய்தான் -அது
மனிதருக்குத் தோழனடி பாப்பா

வண்டி இழுக்கும்நல்ல குதிரை -நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு
அண்டிப் பிழைக்கும்நம்மை ஆடு -இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா

காலை எழுந்தவுடன் படிப்பு -பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு -என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா

பொய்சொல்லக் கூடாது பாப்பா -என்றும்
புறஞ் சொல்லலாகாது பாப்பா
தெய்வம் நமக்குத்துணை பாப்பா -ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா

பாதகஞ் செய்பவரைக் கண்டால் -நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா -அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

துன்பம் நெருங்கிவந்த போதும் -நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்ததெய்வ முண்டு -துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா -தாய்
சொன்ன சொல்லைத்தட்டாதே பாப்பா
தேம்பி யழுங்குழந்தை நொண்டி -நீ
திடங்கொண்டு போராடு பாப்பா

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற -எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா -நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே -அதை
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஇந் துத்தானம் -அதை
தினமும் புகழ்ந்திடடி பாப்பா

வடக்கில் இமயமலை பாப்பா -தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரியகடல் கண்டாய் -இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா

வேத முடையதிந்த நாடு -நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு
சேதமில் லாதஇந் துத்தானம் -இதை
தெய்வமென்று கும்பிடடி பாப்பா

சாதிகள் இல்லையடி பாப்பர் -குலத்
தாழ்ச்சி உயற்ச்சிசொல்லல் பாவம்
நீதி, உயர்ந்தமதி, கல்வி -அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்

உயிர்களிடத்தில் அன்பு வேணும் -தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடையநெஞ்சு வேணும் -இது
வாழும் முறைமையடி பாப்பா

1 comments:

said...

அப்பாடா.. இன்னைக்கு நான் தான் மொதல்ல துண்டு போட்டேன். :P